

திருப்பூர் மாநகரம் பனியன் தொழிலை மையமாகக் கொண்டது என்பதால் இங்கு தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலில் இவர்களின் ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அனைத்து தனியார் நிறுவனங்கள், பனியன் பேக்டரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு நாளை 23-ந்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் நேற்று முதலே இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகள் மட்டுமின்றி, ரெயில்கள் மூலமாகவும் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதேபோல் திருப்பூர் மத்திய பஸ் நிலையம், கோவில் வழி பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.