திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதிக்கு தமிழக அரசு சார்பிலும், மத்திய பல்கலைக்கழகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. திருவாரூரில் நாளை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

விழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) அவர் ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருகிறார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு தமிழக அரசு சார்பிலும், மத்திய பல்கலைக்கழகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு மதியம் 1 மணிக்கு வரும் ஜனாதிபதி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார்.

பின்னர், மாலை 3 மணிக்கு அங்குள்ள அரங்கில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா முடிந்ததும் ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக ஏ.டி.ஜி.பி. சஞ்சய் குமார் தலைமையில் சுமார் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை மண்டல டி.ஐ.ஜி. மற்றும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்ட 10 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி, 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 65 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 400 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், திருவாரூரில் நாளை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com