அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்..!- நாளையுடன் ஓய்கிறது

வாக்குசாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்க இருக்கிறது.
அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்..!- நாளையுடன் ஓய்கிறது
Published on

தமிழகம் முழுவதும் நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் ஓய்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் 23-ந் தேதி நடக்கிறது. 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் தயார் நிலையில் உள்ளனர். இந்த முறை 100 சதவீத வாக்கு சதவீதத்தை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த விழிப்புணர்வு பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வீதி வீதியாக பிரசாரம் நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், விஜய் சென்னை நந்த னத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள்.

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தவுடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது. தமிழகம் முழுவதும் 75,064 வாக்குசாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த வாக்குசாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடங்க இருக்கிறது.

வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com