கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது- மலர்களால் உருவான காற்றாலை, கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

அண்ணா பூங்காவில் டபுல்டிலைட், சம்மர்ஸ்நோ, பர்புல்மூன், மில்கிவே, சில்வர் லினிங், டேபுல் மவுண்டன், குளோரி உள்ளிட்ட பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.கோடை விழாவையொட்டி ஏற்காடு மலைபாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது- மலர்களால் உருவான காற்றாலை, கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இதையடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் கண்டு ரசித்து செல்வார்கள்.

இந்த ஆண்டும் கோடை விழா மலர் கண்காட்சிக்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. குறிப்பாக ஏற்காடு ரோஜா பூங்காவில் 650 ரகமான ரோஜாக்கள் வளர்க்கப்பட்டு அவை தற்போது பூத்துக் குலுங்குகிறது.

மேலும் அண்ணா பூங்காவில் டபுல்டிலைட், சம்மர்ஸ்நோ, பர்புல்மூன், மில்கிவே, சில்வர் லினிங், டேபுல் மவுண்டன், குளோரி உள்ளிட்ட பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. மேலும் ஜினியா, டேலியா, சால்வியா, கார்னேசன், ஜெர்பெரா, பெர்குன்யா, டெல்பீனியம், டிராகன் மலர்வகைகளும் பூத்து குலுங்குகிறது.

ஏற்காட்டில் இன்று 47-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் உழவர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சி தொடர்ந்து வருகிற 26-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு இன்று வந்திருந்தனர்.

அவர்கள் அண்ணா பூங்கா நுழைவு வாயில், காற்றாலை, கடல்வாழ் உயிரினங்கள் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்ததை ரசித்து பார்த்தனர். மேலும் அதனருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் உற்சாகமாக இருந்தனர்.

கோடை விழாவையொட்டி ஏற்காடு மலைபாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு வந்து கொட்டசேடு வழியாக குப்பனூர் செல்லும் சாலையில் திரும்பி செல்லும்படி ஒருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலைப்பாதையின் நுழைவு வாயிலில் கியூஆர் கோடு அச்சடிக்கப்பட்ட வழிகாட்டு கையேடும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com