மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்

வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் எந்திரத்தை இறக்கி அறுவடை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. தொடர் மழையால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலில் அவர் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், மேலையூர், குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டார். வயலில் இறங்கி பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் பயிர் சேதம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான சம்பா பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் எந்திரத்தை இறக்கி அறுவடை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீர் வடிந்து அறுவடை செய்யும் நிலை உள்ளது. தற்போது தொடர் மழையால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

உடனடியாக தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை ஆய்வு செய்து கணக்கெடுத்து போர்க்கால அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். முதலமைச்சரும் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com