பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கடலில் வீச்சு- நாட்டுப்படகில் வந்தவர்கள் கொள்ளையர்களா? என விசாரணை

தென்கடலோர பகுதி, வடக்கு கடலோர பகுதிகளிலும் ரோந்து சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஹோவர் கிராப்ட் படகு மூலம் கடல் மற்றும் தரையிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
தங்கக்கட்டிகள் வீசப்பட்ட இடத்தில் விசைப்படகு மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கக்கட்டிகள் வீசப்பட்ட இடத்தில் விசைப்படகு மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published on

பனைக்குளம்:

பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்ட விரோத பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடலில் படகுகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவதாக கடலோர குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மண்டபம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தென்கடலோர பகுதி, வடக்கு கடலோர பகுதிகளிலும் ரோந்து சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஹோவர் கிராப்ட் படகு மூலம் கடல் மற்றும் தரையிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பாம்பன் பகுதி அருகே நடுக்கடலில் ஒரு நாட்டு படகு வருவது கடலோர போலீசாருக்கு தெரியவந்ததும் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் தங்களை நோக்கி வருவதை கண்டதும் படகில் இருந்த 2 நபர்கள் படகில் வைத்திருந்த சில பொருட்களை எடுத்து கடலில் வீசினர்.

அந்த நாட்டு படகை போலீசார் சுற்றி வளைத்தனர். படகில் இருந்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

படகில் இருந்து வீசிய பொருள் பற்றி கேட்ட போது எதுவும் வீசவில்லை என்று அவர்கள் கூறினர். படகில் வந்த நபர்கள் பலகோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்திருக்கலாம். அவர்கள் தங்களை கண்டதும் கடலில் தங்கக்கட்டிகளை வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து போலீசார் கடலில் முத்துகுளிக்கும் மீனவர்களை அழைத்து வந்து தங்கக்கட்டிகள் வீசப்பட்டதாக சந்தேகப்படும் இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டுப்படகில் வந்த நபர்கள் இலங்கையை சேர்ந்தவர்களா? கொள்ளையர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com