ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 326 தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்- விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை அருகே நன்கு வளர்ந்த 326 தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
வெட்டி அகற்றப்பட்ட தென்னைமரங்கள்
வெட்டி அகற்றப்பட்ட தென்னைமரங்கள்
Published on

உடுமலை:

தமிழகம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் உடுமலையை அடுத்த சின்னவாளவாடி கிராமத்தில் ஏரி புறம் போக்கை ஆக்கிரமிப்பு செய்து தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டு இருந்தது அதிகாரிகள் ஆய்வின்போது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ., கீதா தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. அப்போது அங்கு நடவு செய்யப்பட்டிருந்த 188 தென்னை மரங்கள் எந்திரத்தின் உதவியுடன் அடியோடு வெட்டி அகற்றப்பட்டது. 138 தென்னை மரங்களை ஆக்கிரமிப்பாளர்களே முன்வந்து அகற்றினர். நன்கு வளர்ந்த 326 தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் வாளவாடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்படுகிறது.

பெரியவாளவாடிக்கு உட்பட்ட குட்டை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் குட்டை ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குட்டையில் நீர்தேக்க பரப்பளவு குறைந்து வருவதால் நிலத்தடி நீர் இருப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பெரியவாளவாடி குட்டையில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com