இன்று அன்னையர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்.நெருக்கடியான காலக்கட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை.
இன்று அன்னையர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
Published on

சென்னை:

அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பாலைத்தரும் அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும், அணைத்து நம்மை வளர்ப்பவர் வாழ்வு அணைந்து போகாமல், அனைத்தும் கிடைக்கப் பெற்று, பெற்றவளின் மனம் குளிர கற்று, உற்ற துணையாய் முன்னேறி முழு வாழ்வு வாழ்வதே மக்கள் மனித தெய்வங்களாம் அம்மாவிற்கு சொல்லும் வாழ்த்து. செலுத்தும் நன்றி என்றார்.

என் அம்மாவை வணங்கி எண்ணற்ற அம்மாக்களுக்கு என் வண்ணமயமான அன்னை தின வாழ்த்துக்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனித்துவம் பெற்ற அன்பை, யாருடனும் ஒப்பிட முடியாத, அளவிட முடியாத அன்பை, கற்பனை செய்ய முடியாத பாசத்தை அள்ளித்தரும் தாயின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினமான இன்று அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதாவது:-

எல்லா உயிர்களிடத்தும் நிபந்தனையற்ற அன்பை வாரி வழங்கும் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு என் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய அவசர கால டிஜிட்டல் யுகத்தில் வீடு, அலுவலகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய நெருக்கடியான காலக்கட்டத்திலும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த அன்னையர்கள் என்றுமே தவறுவதில்லை. தமிழ்நாட்டு மக்களும், லட்சோப லட்சம் கழக கண்மணிகளுக்கும், பெற்றெடுக்காத தாயாக திகழ்ந்தவர் மறைந்த அம்மா. அவரது ஆட்சிக்காலத்தில் அன்னையர்களுக்காக பல நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தி அனைவரின் அன்பை பெற்றவராக திகழ்ந்தார். அம்மா காட்டிய அன்பு வழியில் தாய்மார்களை நேசிக்கும், அரவணைக்கும் பண்பை நமக்குள் என்றென்றும் வளர்த்தெடுப்போம் என்று இந்த அன்னையர் தினத்தில் உறுதி ஏற்போம் என்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு, அறிவு, அனுபவம், தியாகத்தின் திருவுருவம் அன்னையர்களே, அவர்களை எந்நாளும் வணங்குவோம். குழந்தைகளை உலகிற்கு கொண்டு வருவது மட்டுமின்றி, அவர்களுக்கு அன்பு, அறிவு, தமது அனுபவத்தின் மூலம் கிடைத்த பாடம் ஆகியவற்றை வழங்கி, எண்ணற்ற ஈகங்களை செய்து சாதனையாளர்களாக மாற்றுவது அன்னையர் தான். அவர்களின்றி நாம் இல்லை. இந்த அடிப்படை உண்மையை மனதில் கொண்டு, எந்நாளும் அவர்களை வணங்குவோம், போற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com