

மதுரை:
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அண்ணாநகர் காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்ட நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். கையெழுத்திட வந்த வாசனிடம் சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.