இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்- அர்ஜூன் சம்பத்

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்- அர்ஜூன் சம்பத்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு முதல் கட்ட தேர்தலாக நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா நாடு வல்லரசாக வேண்டும். தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் திராவிட மாடல் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வினரின் சுவர் விளம்பரங்கள் குறி வைத்து அகற்றப்படுகிறது. ஆனால் தி.மு.க.வினரின் விளம்பரங்களை அகற்றவில்லை. ஆளும் கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கோர்ட்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது மேல்முறையீடு செய்து அதன் அடிப்படையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு ஜனநாயகத்தை அழித்து பணநாயகமாக மாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

போலீஸ் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. எனவே துணை ராணுவம் மற்றும் ராணுவத்தை கொண்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் சட்டசபையை சஸ்பெண்டு செய்து கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மோடி அலைவீச தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெரும். மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை விட பா.ஜ.க. அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி இருப்பதாக கூறுகிறார்கள்.

கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு குளறுபடியும் அவர்களுக்கு தெரியவில்லையா. பாரத் ஜோடா யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி மும்பையில் நடந்து. தற்போது அந்த கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் மட்டுமே உள்ளது. கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com