அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆயிரம் காலிப்பணியிடம்- சி.ஐ.டி.யூ மாநில தலைவர் குற்றச்சாட்டு

தொழிலாளர்களின் பணம் ரூ.10ஆயிரம் கோடியை அரசு செலவு செய்துள்ளது.சென்னையில் மட்டும் 900 பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆயிரம் காலிப்பணியிடம்- சி.ஐ.டி.யூ மாநில தலைவர் குற்றச்சாட்டு
Published on

பழனி:

சி.ஐ.டி.யூ மாநில தலைவர் சவுந்தரராஜன் பழனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பஞ்சப்படியை 93 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர். தொழிலாளர்களின் பணம் ரூ.10ஆயிரம் கோடியை அரசு செலவு செய்துள்ளது. அடுத்த ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு போகும்முன் இந்த பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும்.

தமிழகத்தில் 15 ஆயிரம் காலிபணியிடங்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ளன. அதை நிரப்ப அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் மட்டும் 900 பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.

பராமரிப்பு பணிக்கு பணியாளர்களே இல்லை. இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. ஒப்பந்தமுறையில் தொழிலாளர்களை பணி அமர்த்துவதை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் 2500 பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்து 15 ஆண்டுகளை கடந்துள்ளன. சட்டப்படி அந்த பஸ்களை இயக்க கூடாது. போக்குவரத்து தொழில் சரியாக நடக்க வில்லை என்றால் தமிழகத்தில் பொருளாதாரமே பாதிக்கும். எனவே தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும்.

ஓய்வுபெற்ற பணியாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். விரைவில் அதனை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com