போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: செந்தில் பாலாஜி உள்பட 120 பேருக்கு சென்னை போலீஸ் சம்மன்

செந்தில் பாலாஜி உள்பட வழக்கில் தொடர்புடைய 120 பேருக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வருகிற 6-ந்தேதி கமிஷனர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: செந்தில் பாலாஜி உள்பட 120 பேருக்கு சென்னை போலீஸ் சம்மன்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி உள்பட வழக்கில் தொடர்புடைய 120 பேருக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகிற 6-ந்தேதி கமிஷனர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பணம் கொடுத்து வேலையில் சேர்ந்த டிரைவர்-கண்டக்டர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் செந்தில் பாலாஜியை தவிர மற்றவர்கள் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com