வேகமாக குறையும் உடுமலை அமராவதி அணை நீர்மட்டம்

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது.
வேகமாக குறையும் உடுமலை அமராவதி அணை நீர்மட்டம்
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாசனம் மற்றும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி ஆறு மூலமாக 29 ஆயிரத்து 387 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பிரதான கால்வாய் மூலமாக 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, பாம்பாறு, தேனாறு உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்ததால் அணை நிரம்பி அதன் முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. இதனால் கடந்த மாதம் 25-ந்தேதி ஆறு மற்றும் கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வனப்பகுதியில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து விட்டதால் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நீர் முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக ஓடைகள், ஆறுகளில் படிப்படியாக நீர்வரத்து சரிந்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் குறைந்து விட்டது.

அத்துடன் பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் -பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 69.49 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 490 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com