தமிழகத்திலிருந்து 50 வங்கதேசத்தினர் நாடுகடத்தலுக்காக மேற்கு வங்கம் அனுப்பி வைப்பு

இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனிப் பெட்டியில் ஏற்றப்பட்டு மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்திலிருந்து 50 வங்கதேசத்தினர்  நாடுகடத்தலுக்காக மேற்கு வங்கம் அனுப்பி வைப்பு
Published on

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்படுவதற்காக மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தடுப்புக்காவல்

இந்தியாவில் தகுந்த ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை நேற்று தெரிவித்துள்ளது.

நாடு கடத்தப்பட உள்ள இந்த நபர்களில் 44 ஆண்களும், 6 பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்புத் தடுப்புக்காவல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

ஹவுரா எக்ஸ்பிரஸ்

மத்திய அரசிடமிருந்து இவர்களை நாடு கடத்துவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 3ஆம் தேதி ஆத்தூரிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருச்சியிலிருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனிப் பெட்டியில் ஏற்றப்பட்டு மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் ஆயுதப்படையின் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 40 பேர் கொண்ட ஆயுதப்படை போலீஸ் குழுவினர் இவர்களது முழுப் பயணத்தின் போதும் பாதுகாப்புக்கு உடன் சென்றனர்.

நாடுகடத்தல்

மேற்கு வங்கத்தை அடைந்ததும், அங்குள்ள சர்வதேச எல்லைச் சோதனைச் சாவடியான ஹரிதாஸ்பூர் பகுதிக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

அங்குத் தமிழகக் காவல்துறையினர் இந்த 50 பேரையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடம் முறைப்படி ஒப்படைப்பார்கள்.

அதன் பின்னர், தேவையான அனைத்து சட்டபூர்வ மற்றும் தூதரக நடைமுறைகளையும் பூர்த்தி செய்து, எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இவர்களை வங்கதேச எல்லை அதிகாரிகளிடம் ஒப்படைத்து நாடு கடத்துவர்.

இந்த 50 பேர் அனுப்பப்பட்ட பிறகும், ஆத்தூரில் உள்ள சிறப்புத் தடுப்புக்காவல் முகாமில் இன்னும் 130க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com