

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
மின்னஞ்சலைப் பார்த்த அலுவலகப் பணியாளர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் மாநகரக் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தவுடன் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் படைகள் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கூடிய சிறப்புப் போலீசார் ஆகியோர் உடனடியாக ஆட்சியர் அலுவலக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து நுழைவாயில்களையும் கண்காணித்து வைத்தனர்.
பாதுகாப்புப் படையினர் வளாகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், கழிவறைகள் மற்றும் லிப்ட்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நீண்ட நேர தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் இதை வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்றும் தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாகவே இந்த மாதிரியான மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.