

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாமக 18 இடங்களில் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. தர்மபுரியில் சௌமியா அன்புமணி, செஞ்சியில் கணேஷ் குமார், விக்ரவாண்டியில் சிவகுமார், ஜெயக்கொண்டத்தில் வைத்திலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தருமபுரி சௌமியா அன்புமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசனுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சட்டப்பேரவைக் கட்சியின் துணைத் தலைவராக செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ் குமார், கொறடாவாக விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ச.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.