என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரெயில் பயணிகள் கவனத்திற்கு... இனிமேல் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அபராதம்...
- ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர்.
- சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
தெற்கு ரெயில்வேயின் கீழ் நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக, சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






