

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிக்கு முன்பு 19 லட்சத்து 97 ஆயிரத்து 189 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். எஸ்ஐஆருக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் 16 லட்சத்து 71 ஆயிரத்து 760 பேர் இடம் பெற்றிருந்தனர். அப்போது 3,25, 429 பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.
தொடர்ந்து நடந்த சிறப்பு முகாம் மூலம் பெயர் சேர்த்தல், விண்ணப்பங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் சிறப்பு ஆய்வு நடத்தினர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளர் மற்றும் புதிய வாக்காளர் என 19 லட்சத்து 40 ஆயிரத்து 222 பேர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புதிதாக 68,462 பேர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் வாக்குச்சாவடி அலுவலர் இடமும் தங்களது விண்ணப்பங்களை அளித்து வந்தனர்.
இதில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து 18,935 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு 17 லட்சத்து 59 ஆயிரத்து 357 வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் தற்போது மேற்கொண்ட எஸ்ஐஆர் பணியால் மட்டுமே ஈரோடு மாவட்டத்தில் வாக்கு சதவீதம் உயர்ந்ததாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்
எஸ்ஐஆர் பணியால் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அடையாளம் காண முடியாதவர்கள் என 3 லட்சத்து 25 ஆயிரத்து 429 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த பெயர் சேர்த்தல், புதிய வாக்காளர் விண்ணப்பங்கள் மூலம் 87 ஆயிரத்து 397 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 32 பேர் முழுமையாக நீக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.