

செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வரும் நிலையில் சந்தையில் ஆடுகள் மற்றும் மாடுகளின் விற்பனை அதிக அளவு நடைபெறும். குறிப்பாக பண்டிகை காலங்களில் வழக்கத்திற்கு மாறாக ரூ.4 கோடி முதல் 6 கோடி வரை ஒரே நாளில் விற்பனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை அதிக அளவு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் அதிகளவில் உள்ளதால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவு பணத்தை கொண்டு வந்து ஆடுகளை வாங்க முன்வராததால் ஆட்டுச்சந்தை விற்பனையானது மந்தமாக காணப்பட்டது.
வழக்கமாக பண்டிகை காலங்களில் ரூ.4 முதல் 6 கோடி வரை விற்பனையாகும் ஆட்டுச்சந்தையில் தற்போது ரூ.1 கோடி அளவுக்கு கூட விற்பனையாகாத சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளும் கொண்டு வந்த ஆடுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து செல்லும் சூழல் ஏற்பட்டது. சில வியாபாரிகள் ஜிபே மூலம் பணம் தருவதாக கூறியும், அதன் விவரம் தெரியாத விவசாயிகள் ஆடுகளை விற்காமல் திருப்பி ஓட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.