

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
புதிய கட்சி தொடங்கப்போவதாக சொல்லிக்கொண்டிருந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது பற்றுக்கொண்ட தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம். சட்டசபை தேர்தலில் இந்த கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது.
வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டிலும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று சசிகலா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார்.
இன்று முதல் மார்ச் 22-ந்தேதி வரை போயஸ் கார்டன், ஜெயலலிதா இல்லத்தில் தொண்டர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.