

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் உள்ள தாமரை செல்லியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள தாமரை கோவில் ஏரி, திடீரென ரத்தச் சிவப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தூர் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில், கடந்த சில நாட்களாகத் தண்ணீர் மெல்ல மெல்ல நிறம் மாறத் தொடங்கி, தற்போது முற்றிலும் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்த மாற்றத்தைக் கண்டு கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஏரி நீரை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும், தினமும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இந்த ஏரிக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்கின்றன.
கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். மேலும் இந்த தண்ணீரை பாசனத்திற்குப் பயன்படுத்தினால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதா என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் குடிநீர் ஆதாரங்கள் குறித்த அச்சமும் எழுந்துள்ளது. தண்ணீர் சிவப்பாக மாறியதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஏரியில் படிந்துள்ள பாசிகள் அல்லது நுண்ணுயிரிகளின் வளர்ச்சி (Algal Bloom) காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள ரசாயன மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. எனவே தண்ணீர் நிறம் மாறியுள்ளதால் அதன் தன்மையை உடனடியாக அறிய, நீரின் மாதிரியைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக தலையிட்டு, கால்நடைகள் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.