

சேலம்:
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.). மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி ஆட்களை நியமிக்கிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.சி. பேஸ் -9, 2021-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. இதில் பல்நோக்கு பணியாளர், பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் உள்பட 3261 பணியிடங்களை நிரப்ப வேண்டி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
10-ம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு படித்தவர்கள், இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட் எஸ்.எஸ்.சி. இணையதளம் வழியாக வழங்கப்பட்டது.
இதையடுத்து தேர்வுகள் தமிழகத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கி இன்று (10-ந்தேதி) வரை நடைபெற்றது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒதுக்கப்பட்டது. இங்கு 2 நாட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு தொடங்கிய பிறகு வந்தவர்கள் யாரையும் தேர்வு மைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.