நெல்லையில் ரவுடி கொலை: 6 தனிப்படைகள் அமைப்பு

ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நெல்லையில் ரவுடி கொலை: 6 தனிப்படைகள் அமைப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருமுத்துசாமி. இவரது மகன் தீபக்ராஜா(வயது 30).

இவர் நேற்று மதியம் நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் பாளை கே.டி.சி.நகர் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது ஓட்டலில் இருந்து வெளியே வந்த அவரை 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது.

தகவல் அறிந்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, உதவி கமிஷனர் பிரதீப் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் புளூட்டோ வரழைக்கப்பட்ட நிலையில் அது திருச்செந்தூர் சாலையில் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது.

இந்த சம்பவம் குறித்து பாளை போலீசில் தீபக்ராஜாவின் அண்ணன் முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில் மர்ம நபர்கள் 6 பேர் தீபக்ராஜாவை கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவத்தை நிகழ்த்திய கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்த தீபக் ராஜாவுக்கு அவரது உறவினர் மகள் ஒருவருடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் நேற்று அவர் தனது வருங்கால மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பர்களை கே.டி.சி.நகர் தனியார் ஓட்டலுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். பின்னர் அவர்களை சாப்பிட சொல்லிவிட்டு தனது வருங்கால மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்து விட்டு சிவப்பு நிற காரில் தப்பியதும், அந்த காருக்கு பின்னால் சில மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் தப்பிச்செல்வதும் தெரியவந்தது. இதனால் அந்த சாலையில் உள்ள மற்ற கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் நெல்லை-குமரி நான்குவழிச்சாலை வழியாக காரில் தப்பிச்சென்றது தெரியவந்து.

இதையடுத்து நான்குவழிச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 15-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த கும்பல் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாமா? அல்லது போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிடுவதற்காக குமரி நோக்கி சென்றுவிட்டு பாதி வழியில் திரும்பி கிராமங்கள் வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு தப்பி சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட தீபக்ராஜா மீது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் குண்டு வீசி இரட்டைக்கொலை, முறப்பநாடு, தாழையூத்து, மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள், மதுரை மாவட்டத்தில் ஆயுதங்கள் பயன்படுத்திய வழக்கு என சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அவரது பெயரை ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சமூக ரீதியில் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாமா? என்று தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பவம் நடந்த நேரத்தில் ஓட்டலுக்கு சாப்பிட வந்த சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை தீபக்ராஜா உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று அவரது உறவினர்கள் தமிழர் விடுதலை களம் ராஜ்குமார் தலைமையில் நேற்று அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே திருச்செந்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்யும்வரை அவரது உடலை பெற்று கொள்ளப்போவதில்லை என கூறினார். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக தீபக் ராஜா உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com