

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவை இனங்களும் வலசையாக இடம்பெயர்ந்து இங்குள்ள வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, விதவிதமான குருவிகள், வண்ணப் பறவைகள் ஆகியவை வலசை வரும். அதிலும் குறிப்பாக கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும், குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தக்குருவிகள், குஞ்சுகளாக இருக்கும் பொழுதே, பறவை ஆய்வாளர்களால், குறியீடுகள் பொறிக்கப்பட்ட வளையத்தை கால்களில் அணிவித்து, பறக்க விட்டு விடுவதாகவும், இயற்கையில் அவைகள் வலசை வரும் இடங்களை, அதன் வாழும் காலத்திற்குப் பின்னர் இக்குறியீடுகளைக் கொண்டு அவற்றின் வலசை பாதைகளை அறிந்து கொள்ள உதவுவதாகவும், பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானலில் தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் ரம்யமான குளிர் நிலவுவதால் பல்வேறு இடங்களில் பறவைகளின் ரீங்கார சத்தங்களும் கேட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.