நாகரிகத்தின் பிறப்பிடமாகிய ஈரான் அநாகரிகத்தால் அழியக் கூடாது - போர் நிறுத்தத்திற்கு வைரமுத்து வரவேற்பு

ஏவுகணைகளையும் ட்ரோன்களையும்விடவும் பேச்சுவார்த்தைகள் வலிமையானவை.
நாகரிகத்தின் பிறப்பிடமாகிய ஈரான் அநாகரிகத்தால் அழியக் கூடாது - போர் நிறுத்தத்திற்கு வைரமுத்து  வரவேற்பு
Published on

சென்னை:

அமெரிக்கா- ஈரான் இடையே 2 வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைப்பதாக அமெரிக்காவும், ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரானும் அறிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இப்படியே நீடிக்கட்டும்

தற்காலிகப் போர்நிறுத்தம்

நிரந்தரமாகட்டும்

ஹோர்முஸ் நீரிணையும்

அகந்தையால் அடைக்கப்பட்ட

இதயங்களும்

திறந்தே இருக்கட்டும்

நாகரிகத்தின்

பிறப்பிடமாகிய ஈரான்

அநாகரிகத்தால்

அழிந்துபடக் கூடாது

உலகத்தின் எந்தவிளிம்பில்

போர் நிகழ்ந்தாலும்

இன்னொரு விளிம்பில்

எதிர்வினை இருக்கும்

டென்மார்க்கில் ஒரு பசு

பூச்சி மருந்தடித்த

புல்லைத் தின்றால்

ஆஸ்திரேலியாவில்

சாக்லேட் தின்னும் குழந்தை

சாகக் கிடக்கும்

முடிவுக்கு வரட்டும்

யுத்தம்

ஏவுகணைகளையும்

ட்ரோன்களையும்விடவும்

பேச்சுவார்த்தைகள்

வலிமையானவை

தோட்டாக்களில்

தொடங்கிய போர்

சொற்களில் முடியட்டும்

கல்லெறிந்து விரட்டுங்கள்

கழுகுகளை;

தானியமிட்டுக் கூப்பிடுங்கள்

புறாக்களை

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com