நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது

160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும்.
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் வருகிற 13-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது
Published on

நாகப்பட்டினம்:

நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதையடுத்து நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் அந்த கப்பல் போக்குவரத்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் 'சிவகங்கை' கப்பல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று நாகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை வருகிற 13-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயின்படி 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் ரூ.4800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணி 60 கிலோ எடை வரை உடைமைகள் எடுத்து செல்லலாம்.

நாகை துறைமுகத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசந்துறையை சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்தை வந்தடைகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும். காலதாமதம் ஏற்படாதவாறு பயணிகளை பரிசோதனை செய்வதற்காக 4 கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com