மாநகராட்சி ஆரம்ப பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம்- காலாண்டு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த எதிர்ப்பு

எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி ஆரம்ப பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம்- காலாண்டு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த எதிர்ப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் ஆமீம்புரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆரம்ப பள்ளியிலும் காலாண்டு தேர்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களுக்கு எழுத்து திறன் குறைவதோடு, செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை திறனும் பாதிக்கப்படுவதாக கூறி இன்று மாணவர்களின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் குழந்தைகள் படிப்பது என்பது வேறு. ஆனால் தற்போது சாதாரண காலகட்டத்திலும் அதாவது இந்த காலாண்டு தேர்வின் போது, எழுதும் வகையில் தேர்வை நடத்தாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகிறார்கள். இதனால் இணையதளம் முடக்கம் ஏற்படும்போது ஒரே தேர்வை 2 முதல் 3 நாட்கள் வரை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய நிலை உள்ளது. மேலும் குழந்தைகளின் பார்வை திறன் குறைபடும்.

எனவே எழுத்து முறையில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com