பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அரிய வகை பறவைகள் வருகை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அரிய வகை பறவைகள் வருகை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி பரவலாக காணப்படுகிறது.
Published on

தாம்பரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியிலும் போதுமான தண்ணீர் தேங்கி பசுமையாக காணப்படுகிறது.

வழக்கமாக பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும் வலசை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிற்பகுதியில் தொடங்கும். கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இவை வந்து செல்லும்.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு சாம்பல்தலை, மஞ்சள் வால்பறவை, நீலசிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி பரவலாக காணப்படுகிறது. வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் பல நீர்நிலைகள் தண்ணீரால் நிரம்பி உள்ளன. எனவே இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பறைவகள் வருவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை போதிய உணவுகளை பறவைகளுக்கு உறுதி செய்து உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கர்கேனி மற்றும் தட்டைவாயன் போன்ற வாத்து இனங்கள் வந்து உள்ளன. ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவை கடந்து பறவைகள் வரும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com