வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நேரம்- அரசு டாக்டர்களுக்கு புதிய உத்தரவு

24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கவனிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் காலையில் 9 மணி முதல் மாலை 4 மணிவரை பார்க்க வேண்டும்.
வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நேரம்- அரசு டாக்டர்களுக்கு புதிய உத்தரவு
Published on

சென்னை:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது-

அனைத்து மாநில மக்களுக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை உலகளாவிய வகையில் வழங்குவது என்பது நமது மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

மேற்கூறியவற்றை அடைவதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் வெளிநோயாளிகள் சேவைகள் சரியான நேரத்தில் தொடங்குவது என்பது மிகவும் முக்கியமாகும்.

குறிப்பாக சுகாதார சேவைகளை மக்கள் பெறுவதற்கு தேவையற்ற தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இப்போது பல இடங்களில் இந்த சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே இது சம்பந்தமாக கலெக்டர்கள் தங்களின் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி மருத்துவமனை டீன்கள் மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆகியோர் வெளிநோயாளிகளுக்கான நேரத்தை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசு மருத்துவகல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான பொறுப்பான மருத்துவர்கள் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நோயாளிகளை பார்க்க வேண்டும். அதேபோல் 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவை கவனிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.) காலை 7 மணிக்குள் வந்து ஓ.பி.யை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணி முதல் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர டூட்டி டாக்டர்கள் காலையில் உள்ளது போல் மாலை 3 மணி முதல் வெளிநோயாளிகள் பிரிவையும் பார்க்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் காலையில் 9 மணி முதல் மாலை 4 மணிவரை பார்க்க வேண்டும். கூடுதல் டாக்டர்கள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை பார்க்க வேண்டும். அதன்பிறகு மதியம் 2 மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரை மற்றொரு டாக்டர் இருந்து கவனிக்க வேண்டும்.

பல் ஆஸ்பத்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ள இடங்களில் வெளி நோயாளிகள் பிரிவில் காலை 8 மணியில் இருந்து 1 மணி வரையும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் இருந்து நோயாளிகளை பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com