காங்கிரஸ் தலைவர் மர்மமரணம் வழக்கு: கூடுதல் தடயங்களை சேகரிக்க தீவிரம் காட்டும் போலீசார்

காணாமல் போன அவரது 2 செல்போன்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.கிணற்றில் அவரது செல்போன் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற திட்டமிட்டனர்.
காங்கிரஸ் தலைவர் மர்மமரணம் வழக்கு: கூடுதல் தடயங்களை சேகரிக்க தீவிரம் காட்டும் போலீசார்
Published on

திசையன்விளை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங் மர்மமரணம் வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதனால் தடயங்களை தேடி போலீசார் அலைந்து வருகின்றனர். அவரது உடல் கிடந்த தோட்டத்தில் மேலும் சில தடயங்களை சேகரிக்க தொடர்ந்து நேற்று 4-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் அங்கு ஆய்வு செய்தனர்.

காணாமல் போன அவரது 2 செல்போன்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் அவரது செல்போன் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற திட்டமிட்டனர்.

பின்னர் நேற்று இரவு 2 ராட்சத மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடங்கினர். இன்று காலை வரையிலும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது.

சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்த 22 அடி தண்ணீரும் இன்று காலையில் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. எனினும் இடுப்பு அளவிற்கு சகதி இருப்பதால் முத்து குளிப்பவர்கள் அல்லது தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றுக்குள் இறங்க செய்து அதில் ஏதேனும் தடயம் சிக்குகிறதா? என்ற சோதனையில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்டு இருப்பதால், அவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு 2 லிட்டர் அளவு கொண்ட பாட்டில் கிடைத்துள்ளது. அதில் பதிவாகியுள்ள கைரேகைகளை நிபுணர்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com