

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். மத்திய பாஜக அரசின் மோசடியாக மசோதாவை இறுதி வரை எதிர்ப்போம் என முழக்கமிட்டனர்.
இந்நிலையில், தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மத்திய அரசை கண்டித்து காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் கருப்பு கொடி கட்டியதுடன் கருப்பு கொடியை கையில் ஏந்தி மத்திய அரசை கண்டித்து பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
துணை மேயர் சுனில் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், பகுதி கழக செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் அவசரமாக பாராளுமன்ற கூட்டத்தைக் கூட்டுவது குறித்து அவர்களிடம் தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க. வலையில் மாட்டிக் கொண்டுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் யாரிடமும் இன்னும் அகப்படவில்லை. அதனால் பேசுகிறார். தொகுதி மறுவரையறையை பா.ஜ.க. உள்நோக்கத்துடன் செய்வதற்கு காரணம் எந்த மாநிலத்தின் தயவும் இல்லாமல் சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு தான் நினைத்ததை செய்கிறது. இதன் மூலம் பா.ஜ.க. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு சர்வாதிகாரியாக இருக்க பார்க்கிறது.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து இதே நிலை நீடித்தால் மக்கள் போராடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.