என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'பிக்பாஸ் வீட்டுக்கு செல்வது போல சிறைக்கு சென்று வா'- மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்
- தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் எனது மகனின் செல்போன் எண் இருந்துள்ளது. அதை வைத்து கைது செய்துள்ளார்கள்.
சென்னை:
போதைப்பொருள் வழக்கில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மகனை பார்க்க மன்சூர் அலிகான் வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் எனது மகனின் செல்போன் எண் இருந்துள்ளது. அதை வைத்து கைது செய்துள்ளார்கள். போதைப்பொருளை ஒழிக்க நான் 'சரக்கு' என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஓ.டி.டி.யில் கூட அந்த படத்தை வெளியிடவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? நேரம் வரும் போது நான் பொங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவா் தனது மகனிடம், 'பிக்பாஸ் வீட்டுக்கு செல்வது போல சிறைக்கு சென்று வா. அங்கு நிறைய புத்தகங்களை படி' என்று அறிவுரை கூறினார்.






