

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்கள் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அடுத்த ஜீரகள்ளி வனச்சரகம் உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரங்கராஜ் என்பவர் கரும்புத் தோட்டத்தில் கரும்புகளை பயிரிட்டு இருந்தார். நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ரங்கராஜ் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும் மிதித்தும் சேதம் செய்தது. பின்னர் விவசாயிகள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டினர்.
கரும்பு பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை இரவு நேரங்களில் கிராமத்துக்குள் புகும் சம்பவம் விவசாயிகள், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.