ஆருத்ரா நிறுவனத்தில் ரூ.7 லட்சத்தை இழந்தார்- காஞ்சிபுரம் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆருத்ரா நிறுவனத்தில் ரூ.7 லட்சத்தை இழந்தார்- காஞ்சிபுரம் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ(வயது 36).இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 6 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளன. ராஜீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வீட்டு உபயோக பொருட்கள் மார்க்கெட்டிங் தொழிலையும் செய்து வந்தார்.

இந்நிலையில் ராஜீ தனது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் என பலரிடம் பணம் பெற்று ஆருத்ரா, மற்றும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் ரூ. 7லட்சம் வரை பணம் கட்டியுள்ளார். இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வழக்கில் சிக்கியதையடுத்து ராஜீ பணத்தை இழந்து தவித்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜீ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இதற்கிடையே பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியும் அதிகரித்தது.

இந்நிலையில் ராஜீ வீட்டில் தனியாக இருந்த வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ராஜீ வெளியில் வராததால் அவரது பெரியம்மா நீலா என்பவர் கதவை தட்டினார். அப்போதும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிமெண்ட் சீட் போட்ட இரும்பு கம்பியில் வேட்டியால் தூக்கு போட்டு ராஜீ தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து வந்து ராஜீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜீ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ள நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீருடன் தவித்து வருகிறார்கள்.

ராஜீ உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆருத்ரா, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பலர் மன உளைச்சலில் தவித்து வரும் நிலையில் இது போன்று மேலும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் பணத்தை இழந்தவர்களுக்கு அதனை திருப்பி கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com