

சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கட்சித்தலைவர் கமல்ஹாசன் இதில் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன்பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று 7-வது ஆண்டில் மக்கள் நீதி மய்யம் அடியெடுத்து வைத்து உள்ளது. இந்த 7 ஆண்டுகளில் நேர்மையான அரசியலை முன்னெடுத்து சென்று உள்ளோம். அதனை பெரிய சாதனையாகவே கருதுகிறோம்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும். கெட்ட செய்தி டெலிகிராம் மூலம் வரும். நல்ல செய்தி கடிதம் மூலமாகவே வரும்.
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். அதுபற்றியும் விரைவில் உங்களிடம் தெரிவிப்போம். உங்களிடம் எதையும் சொல்லாமல் தப்பிக்க முடியாது. அதனை சொல்வது எனது கடமை ஆகும்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் அவரை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து சொன்னது நான்தான்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 6 ஆண்டு நிறைவில் எதை செய்யக்கூடாது என்பதையும் மற்றவர்கள் செய்யாமல் மறந்தது எது என்பதையும், நியாயமான விஷயங்களை யார் சொல்லாமல் விட்டார்கள் என்பதையும் கற்றுக்கொண்டு உள்ளோம்.
எங்களது நேர்மையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் எங்களுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கி உள்ளது.
எங்களது கட்சியின் 7 ஆண்டு சாதனை என்ன என்று கேட்கிறீர்கள். பாண்டு பத்திரங்களை நாங்கள் வாங்கியது இல்லை. கடந்த 28 ஆண்டுகளாக தூசுபடிந்து கிடந்த கிராம சபை கூட்டங்களை தூசி தட்டி எழுப்பி உள்ளோம். அதுவும் மிகப்பெரிய சாதனைதான்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.