

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதன் சுவையே தனி ரகம். பொதுவாக பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை பலாப்பழம் சீசன் இருக்கும்.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் தள்ளுவண்டி கடைகளில் பலாச்சுளை விற்பனை களை கட்டியுள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் அதிகளவில் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பலாப்பழம் ரூ.40முதல் ரூ.70வரை விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் ஒரு கிலோ பலாப்பழம் ரூ.100வரை விற்கப்படுகிறது. சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளில் பலாச்சுளை கால் கிலோ ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மொத்த வியாபாரி ஹனிபா கூறும்போது :- ஜனவரி மாதம் இறுதியில் கேரளாவில் இருந்து மட்டுமே பலாப்பழம் விற்பனைக்கு வர தொடங்கியது. தற்போது பண்ருட்டியில் இருந்து தினசரி 25டன் பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. இனி வரும் நாட்களில் இதன் வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.