

சென்னை மாநகராட்சி முழுவதும் 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகம் தொடங்கப்பட்டபோது தரமான உணவு கிடைத்து வந்ததால் நாள்தோறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டு வந்தார்கள்.
குறிப்பாக, கொரோனா மற்றும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பல்வேறு தரப்பு மக்களுக்கும் அம்மா உணவகங்கள் மூலமே உணவு வழங்கப்பட்டது. இதற்கிடையே, படிப்படியாக உணவின் தரம் குறைந்ததால் அம்மா உணவகத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் குறைவாகவே அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், அம்மா உணவகத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, சமையல் உபகரணங்கள் கொள்முதல் செய்து தரமான உணவு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதையடுத்து. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கமிஷனர், இணை கமிஷனர்கள் நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.
அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்ட பின்னர் தற்போது நாள்தோறும் உணவு சாப்பிட வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில், நாள் தோறும் 70 ஆயிரமாக இருந்த பொதுமக்களின் வருகை தற்போது 1 லட்சத்து 4 ஆயிரம் வரையில் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அம்மா உணவகங்களில் 3 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அம்மா உணவகங்கள் ரூ.17.6 கோடி அளவில் மேம்படுத்தப்பட்ட பின்னர் நாள் தோறும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த 6 மாத காலத்தில் ரூ.16.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.