பென்னிகுக் சிலை திறப்பு விழா- அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தேனி எம்.எல்.ஏக்கள் லண்டன் பயணம்

முல்லைபெரியாறு அணையை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆங்கிலேய பொறியாளர் ஜான்பென்னிகுக் கடந்த 1895-ம் ஆண்டு கட்டினார். தேனி மாவட்ட மக்கள் ஆண்டுதோறும் ஜான்பென்னிகுக் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜான் பென்னிகுக்
ஜான் பென்னிகுக்
Published on

தேனி:

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முல்லைபெரியாறு அணையாகும். இந்த அணையை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆங்கிலேய பொறியாளர் ஜான்பென்னிகுக் கடந்த 1895-ம் ஆண்டு கட்டினார். இதன்மூலம் இந்த 5 மாவட்டங்களின் வறட்சி நிலை நீங்கியது.

இதற்கு நன்றிக்கடனாக தேனி மாவட்ட மக்கள் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று வரை தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுக் பெயரை சூட்டி அழைத்து வருகின்றனர். அவருக்கு கூடலூர் அருகே லோயர்கேம்பில் மணிமண்டபம் தமிழக அரசு சார்பில அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரது நினைவை போற்றும் வகையில் பென்னிகுக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பரளி நகர மைய பூங்காவில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சிலையை நிறுவ இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி செயிண்ட்பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

வருகிற 10-ந்தேதி சிலை திறக்கப்பட உள்ளது. இதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசுமுறை பயணமாக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்.எல்.ஏக்களான ராமகிருஷ்ண்ன், மகாராஜன், சரவணக்குமார், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை சென்றனர்.

இன்று காலையில் அவர்கள் லண்டன் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த பென்னிகுக்கிற்கு அவரது சொந்த ஊரில் தமிழக அரசு சார்பில் சிலை அமைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இருந்தபோதும் குறிப்பிட்ட அளவு விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்திருக்கலாம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com