

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 12-ந் தேதி 99.9 டிகிரி வெயில் பதிவான நிலையில் அதன் பின்னர் நேற்று வரை தொடர்ந்து 11 நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 17-ந்தேதி 103.1 டிகிரி வெயில் பதிவானது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நேற்றும் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்றும் 102.7 டிகிரி வெயில் பதிவானது. இதனால் வாக்களிக்க சென்ற மக்களும் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்றும் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிக அளவில் இருந்தது. மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்ததால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது.
இதனால் சேலம் மாநகரில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சாலையில் சென்ற மக்கள் தலையை துணியால் மூடிய படியும், குடைகள் பிடித்த படியும், தொப்பி அணிந்த படியும் சாலைகளில் சென்றனர். கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க இயற்கை மற்றும் செயற்கை குளிர்பானங்களை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள்.