

கோவை இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரது 13 வயது மகன், ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். தற்போது கோடை விடுமுறை என்பதால் கடந்த 15 ஆம் தேதி பிற்பகலில் தனது 2 நண்பர்களுடன் சேர்த்து மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
மீன் பிடிக்கும் இடத்தில் இவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த நண்பர்கள் இருவரும் கீழே இருந்த காலி மதுபாட்டிலால் 13 வயது சிறுவனை அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அடித்த சில நிமிடங்களிலேயே ரத்தம் வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.
அந்த சிறுவனின் பெற்றோர்கள் இரவு நேரம் ஆகியும் மகனை காணவில்லை என நண்பர்களிடம் விசாரித்த போது, நங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தோம் அவனை யாரோ தெரியாதவர்கள் அழைத்து சென்றுவிட்டனர் என்று அவர்களிடம் உண்மை சம்பவத்தை மறைத்துவிட்டு தப்பித்தனர்.
இதைக்கேட்ட பெற்றோர்கள் பதறியடித்து சிங்காநல்லுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இரண்டு சிறுவர்களும் உண்மையை ஒப்புக் கொண்டனர்.
இன்று காலை, சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின் படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புதைக்கபட்ட மாணவனின் உடலை தோண்டி எடுத்தனர்.
'தன் பிள்ளை ஏதோ விளையாடத்தான் சென்றிருக்கிறான் என்று நம்பிய பெற்றோர், அவன் மண்ணுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு கதறி அழுதனர்'.
மாணவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி பருவத்தில், நண்பர்களுடன் ஏற்பட்ட கோபத்தால் விபரீதத்தைக்கண்டு தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.