

தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2025-26வது ஆண்டில் 10.83% என்ற பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 11.19% ஆக இருந்தது.
உத்தரப் பிரதேசம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களின் தரவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது.
இந்தியாவின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியை எட்டியது மட்டுமல்லாமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
முக்கியத் துறைகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மீட்சியே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த தரவுகளின்படி தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தற்போது ரூ.4.08 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ.2.05 லட்சமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் வருமானம் அதைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது.
கர்நாடகாவின் தனிநபர் வருமானம் ரூ.4.33 லட்சமாக உள்ளநிலையில், தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாக உள்ளது.