கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு
Published on

கடலூர்:

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பியது.

அணையில் இருந்து 2.40 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தென்பெண்ணையாறு கரையோரம் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடங்கியது.

இது மட்டும் இன்றி ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தும் பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பனை எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் அனு மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. சார்பில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு புடவை, பெட்ஷீட் போர்வை, 5 கிலோ அரிசி மற்றும் உணவு பொருட்கள் ஆகிய தொகுப்புகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.கே. வெங்கட்ராமன் செய்திருந்து அனைவரையும் வரவேற்றார்.

மேல்பட்டாம்பாக்கத்தில் ஆய்வை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் கடலூருக்கு வந்தார். குமாரபுரத்துக்கு வந்த போது மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் காரை பார்த்ததும் கையை காண்பித்தனர்.

உடனடியாக காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார்.

பொதுமக்கள் அவரிடம் இந்த பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்குகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன் பின்னர் அவர் கடலூர் புறப்பட்டு வந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com