அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து- சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாக வழக்கு.இனி கருத்துக்களை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து- சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Published on

சென்னை:

சவுக்கு சங்கர் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சவுக்கு சங்கர் இவ்வாறு அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதிக்கவேண்டும், சவுக்கு சங்கர் மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிடவேண்டும் என்றும், செந்தில் பாலாஜி தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, இனி கருத்துக்களை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com