50 ஆயிரம் புறம்போக்கு கட்டிடங்களுக்கு சொத்துவரி- மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன.ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
50 ஆயிரம் புறம்போக்கு கட்டிடங்களுக்கு சொத்துவரி- மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்கள் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய் சொத்து வரியாக வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி செலுத்தாத நீண்ட காலமாக உள்ள வணிக பிரமுகர்கள் இடமிருந்து வசூலிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக் கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்து வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றிற்கு சொத்து வரி வசூலிப்பதன் மூலம் மாநகராட்சியின் வருவாயை பெருக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

முதலில் 20,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தியாகராயநகர், ஆலந்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன.

இதுபோன்ற கட்டிடங்களை சுட்டிக் காட்டி அவற்றை மதிப்பீடு செய்து சொத்து வரி வசூலிக்க முடியும் என்று அரசிடம் விளக்கம் அளித்துள்ளது.

கிராம நத்தம் தவிர தி. நகர் போன்ற பகுதிகளில் சட்டபூர்வ வாரிசுகள் இல்லாமல் உரிமை கோரப்படாத நிலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. நகரில் இது போன்ற நிலங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. அவர்களுக்கு பட்டா இல்லை. ஆனால் பல தலைமுறைகளாக குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுபோன்ற சொத்துகள மீது அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கிராம நத்தம் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்யவில்லை. இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் வக்பு வாரிய நிலங்களில் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை.

பட்டா இல்லாத கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com