என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம்
    X

    கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம்

    • சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
    • கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை யொட்டி கன்னியாகுமரியில் இன்று காலையில் பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் பயங்கர சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.

    கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 11 மணி வரை தொடங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    மேலும் சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    Next Story
    ×