தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: பஞ்சாப், தெலுங்கானா முதலமைச்சர்கள் சென்னை வருகை

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: பஞ்சாப், தெலுங்கானா முதலமைச்சர்கள் சென்னை வருகை
Published on

2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.

அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.

தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னை வந்தடைந்தார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு ஆகியோர் அவுரைவரவேற்றனர்.

பின்னர், தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார்.

அவரை, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்

தொடரந்து, நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com