

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை ரூ. 2043.50 ஆக இருந்த நிலையில் ரூ. 2,246.50 ஆக உயர்ந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை அதிகரித்தபோதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
மேற்காசிய போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஓட்டல்கள், டீக்கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் விலை மேலும் அதிகரிக்கும் என வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.