கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கோவை கோர்ட்டில் இதுவரை 42 பேர் சாட்சியம்

இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கோவை கோர்ட்டில் இதுவரை 42 பேர் சாட்சியம்
Published on

கோவை:

கோவையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி காதலருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி, 3 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் 6 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 6-ந் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று இந்த வழக்கில் 15 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த வழக்கில் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவி, காதலன், போலீசார், பொதுமக்கள் என மொத்தம் 42 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com