வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் - ஏற்பாடுகள் தீவிரம்

பந்தலின் முகப்பு பகுதியில் முதலமைச்சர் விஜய் தனது வாகனத்தில் இருந்தபடியே பேச இருக்கிறார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் - ஏற்பாடுகள் தீவிரம்
Published on

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக விஜய் திருச்சிக்கு செல்வதால் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள்.

வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு செல்கிறார். செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தலின் முகப்பு பகுதியில் விஜய் தனது வாகனத்தில் இருந்தபடியே பேச இருக்கிறார்.

முதலமைச்சர் விஜய் பேச உள்ள இடம் மற்றும் அவர் வருவதற்கான பாதை ஆகிய இடங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். முதல்வர் நிகழ்ச்சயில் கலந்து கொள்ள கியூ.ஆர். குறியீடு கொண்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இது குறித்து த.வெ.க. தலைமை சார்பில் அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், சிறுவர்-சிறுமிகள், பள்ளி மாணவ-மாணவிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான கியூ.ஆர். குறியீடு அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, கியூ.ஆர். குறியீடு அனுமதிச்சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்," என கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com