என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொங்கல் பரிசு தொகை ரூ.3000- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    பொங்கல் பரிசு தொகை ரூ.3000- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.3000 வழங்கப்படுகிறது.
    • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களும் பயன்பெறுவர்

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.

    பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.

    மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959/- செலவில் வழங்கப்படும்.

    பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.



    Next Story
    ×